4) மெளரிய பேரரசு - அசோகருக்கு பின்னர்
மெளரிய பேரரசு (அசோகருக்கு பின்னர்) :
தசரத மெளரியர் :
ஆட்சிக்காலம் : (கி.மு.232-224)
அசோகருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த இவர் அசோகரின் பேரன். அசோகரின் மறைவுக்கு பின்னர் பேரரசை பேரன் தசரதனும் மகன் குணாளனும் பிரித்து கொண்டனர் என்று ஒரு குறிப்பும் இன்னொரு குறிப்பு தசரதனும் குணாளனின் (இவர் அசோகரின் 5வது மனைவி திவ்யரக்ஸாவினால் கண்பார்வை பறிக்கப்பட்டவர்) மகனான சம்பிரதியும் பிரித்து கொண்டனர் என்றும் குறிப்புகள் கூறுகின்றன. தசரதன் பாடலிபுத்திரத்தை தலைநகராக வடக்கு மற்றும் கிழக்கு மெளரிய பேரரசையும் சம்பிரதி உஜ்ஜைன் நகரை தலைநகராகக் கொண்டு மேற்கு மற்றும் தெற்கு மெளரிய பேரரசை ஆண்டனர். இவர் புத்த மதத்தை பின்பற்றியவர். இவரது காலத்தில் மெளரிய பேரரசின் தென் பகுதியை சாதவாகனர்கள் கைப்பற்றினர். கிழக்கு பகுதிகளை கலிங்கத்தின் மகாமேகவாகன் வம்சத்தினர் கைப்பற்றி ஆண்டனர். இவர் ஆட்சியில் ஆந்திரா மற்றும் மைசூர் ராஜ்ஜியங்கள் தன்னாட்சியுடன் பேரரசில் இருந்து விடுபட்டது. பேரரசின் தொலைதூர பகுதிகளை தசரத மெளரியரால் தக்க வைக்க முடியவில்லை.
சம்பிரதி :
ஆட்சிக்காலம் : (கி.மு.224-215)
இவர் அசோகரின் மகனான குணாளனின் மகன். தசரத மெளரியருக்கு பின்னர் மெளரிய அரியணை ஏறினார். தந்தை குணாளரின் கண்கள் குருடாக்கப்பட்டவுடன் அவர் அரியணை ஏற முடியாமல் போகவே அவர் தன் மகன் சம்பிரதியுடன் உஜ்ஜைன் சென்று வசித்தார். அசோகரை பாடலிபுத்திரம் சென்று சந்தித்த இவர் அரியணை உரிமை கோரவே அசோகர் தனக்கு பிறகு தசரத மெளரியர் என்றும் அவருக்கு பிறகு சம்பிரிதியே அடுத்த மெளரிய அரசன் என உறுதியளித்ததாகவும் அதனால் தசரத மெளரியர் கி.மு.224 ல் மரணமடைந்தவுடன் சம்பிரதிக்கு மெளரிய அரியணை கிட்டியது. இவர் சமண மதத்தை பின்பற்றினார். பாடலிபுத்திரம் மற்றும் உஜ்ஜைன் என இரண்டு தலைநகரங்கள் இவரது ஆட்சியில் இருந்தது. மீண்டும் ஆந்திரா மற்றும் மைசூர் ராஜ்ஜியங்களை வென்று பேரரசில் இணைத்தார்.
சாலிசுகா மெளரியன் :
ஆட்சிக்காலம் : (கி.மு.215-202)
சம்பிரதிக்கு பின்னர் ஆட்சியேறிய இவர் அவரின் மகன். இவரது காலத்தில் மெளரிய பேரரசு வீழச்சியடைய ஆரம்பித்தது. இவர் தந்தையை போல சமண மதத்தை பின்பற்றினார்.
தேவ வர்மன் (தேவதர்மன்) :
ஆட்சிக்காலம் : (கி.மு.202-195)
சாலிசுகாவுக்கு பின்னர் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த மெளரிய பேரரசின் 7வது மன்னனாக ஆட்சிக்கு ஏறிய இவர் 7 வருடங்கள் ஆட்சி புரிந்தார். இவர் புத்த மதத்தை பின்பற்றினார்.
சத்தாதன்வன் :
ஆட்சிக்காலம் : (கி.மு.195-187)
தேவவர்மனுக்கு பின்னர் 8வது மெளரிய அரசராக அரியணை ஏறினார். வலிமை குன்றிய மெளரிய பேரரசை அண்டை நாட்டு அரசர்கள் தொடர்ந்து படையெடுத்து பேரரசின் பகுதிகளை பிடிக்கவே கடைசியில் இவர் ஆட்சியில் மகதம் (தற்கால பீகார்) மட்டுமே எஞ்சியது.
பிரகத்திர மெளரியன் :
ஆட்சிக்காலம் : (கி.மு.187-180)
சத்தாதன்வனுக்கு பிறகு அவரது மகனான இவர் 9வது மற்றும் கடைசி மெளரிய அரசராக பட்டத்திற்கு வந்தார்.இவரது காலத்தில் மெளரிய பேரரசு மகதம் என்ற அளவிலிருந்து சுருங்கி வெறும் பாடலிபுத்திரம் என்றாகிவிட்டது. இவரை இவரின் படை தளபதியான புஷ்யமித்திர சுங்கன் என்பவர் கொன்று மகத நாட்டில் சுங்க வம்சத்து ஆட்சியை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வுகள் பாணபட்டர் எழுதிய ஹர்ச சரித்திரம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதவிய நூல்கள் :
அசோகர் மெளரிய சிங்கம் - அசோக் கே.பேங்கர்
அசோகனின் காதலி - அரு.ராமநாதன்
அசோகர் - வின்ஸென்ட் ஸ்மித்
விக்கிபீடியா பிரிட்டானிகா தகவல்கள்
Comments
Post a Comment